தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் உடை, முடி உள்ளிட்ட பல விஷயங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. Code of Conduct for Students
- அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஆசிரியர்கள் மாணவர்களை உடல்ரீதியாக தண்டனை கொடுத்து, துன்புறுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 11 புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளின் விவரம்:
- காலை 9.15 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வரவேண்டும்.
- மாணவர்கள் லோ-ஹிப் பேன்ட் அணியக்கூடாது.
- நீளமான அரைக்கை சட்டையையே மாணவர்கள் அணிய வேண்டும், அதை மாணவர்கள் டக்-இன் செய்ய வேண்டும்.
- கருப்பு நிற பக்குளை உடைய பெல்ட்டையே மாணவர்கள் அணிய வேண்டும்.
- மாணவர்கள் தங்கள் முடியை ‘போலீஸ் கட்’ செய்து கொண்டே பள்ளிக்கு வரவேண்டும்.
- மாணவர்கள் மீசை பெரிதாக இருக்கக்கூடாது. முறுக்கு மீசை வைக்கக்கூடாது.
- மாணவர்கள் கைகளில் ரப்பர் பேண்ட், செயின், பிரேஸ்லெட் மற்றும் காதுகளில் தோடு உள்ளிட்டவற்றை அணியக் கூடாது.
- மாணவர்கள் பெற்றோர் கையெழுத்திட்ட விடுப்பு கடிதத்ததை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து, அவர்களிடம் அனுமதி பெற்ற பின்பே விடுமுறை எடுக்க முடியும்.
- மாணவர்கள் தங்கள் பிறந்தநாளின் போதும், பள்ளி சீருடையிலேயே பள்ளிக்கு வரவேண்டும்.
- மாணவர்கள் மொபைல் போன், பைக் உள்ளிட்டவற்றை பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது.
- நகங்களை முறையாக வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்றாத மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகளால், மாணவர்கள் பள்ளிகளில் ஒழுக்கத்துடன் இருப்பார்கள் எனவும், அவர்களின் கல்வித் தரம் உயரும் எனவும் ஆசிரியர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் தனியார் பள்ளிகளில் நீண்ட நாட்களாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், அதைதான் இப்போது அரசுப் பள்ளிகளில் பின்பற்றுவதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து, இதுவரை எவ்வித புகார்களும் எழவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
👍
ReplyDelete